Sunday 2 February 2020

சட்டையில் ஒட்டும் தூசிகளைத் தட்டிவிடுவது போல் “ஆன்மாவில் படும் தீமைகளைத் தள்ளிவிட வேண்டும்…!”


நமது வாழ்க்கையில் கோபமோ வெறுப்போ வேதனையோ இவைகளை அதிகமாகச் சந்திக்க நேருகின்றது. அதன் வழி நம் உடல்களிலே அந்த அணுக்கள் பெருகுகின்றது.

கோபமும் வேதனையும் வெறுப்பும் இவை வரும் போது நம் நல்ல குணங்களுக்குள் ஊடுருவி நம் உடலுக்குள்ளே “பெரும் போராக… நடக்கின்றது…!”

நல்ல அணுக்கள் தன் ஆகாரத்திற்கு உணர்ச்சிகளை உந்தினால் அந்தக் கார உணர்ச்சிகளை உணவாக உட்கொள்ளும் அணுக்கள் அதனுடைய வளர்ப்பிற்கு அதை நுகரச் செய்து அதை உணவாக எடுத்துக் கொள்ளும் போது நம் உயிரிலே பட்டுத்தான் இந்த உணர்வுகள் செல்லுகின்றது.
1.அப்போது இந்த உணர்வுகள் நமக்குள் குழப்பமும் சிந்திக்கும் தன்மை இழக்கவும்
2.நம்மை அறியாதபடி ஓர் இயக்க நிலையாக மாறுகின்றது.

உதாரணமாக ஒரு தரம் கோபித்தவரைப் பார்க்கின்றோம். அந்தக் கோபித்த உணர்வுகளோ நமக்குள் அந்த அணுக்களாக மாறி மாறி நம்மை அறியாமலே அந்தக் கோப உணர்ச்சிகளைத் தூண்டும்.

அதனதன் பசிக்கு ஏங்கும் போது அதை நாம் நுகர நேருகின்றது. உயிரிலே படுகின்றது. அந்த உணர்ச்சியின் தன்மை நாம் அறிகின்றோம். அதன் வழி நம் எண்ணம் சொல் செயல் எல்லாம் அமைகின்றது.

இவ்வாறு நம் உடலில் அந்தக் கார உணர்ச்சிகள் அதிகமாக அதிகமாக அந்த அணுக்கள் பெருகப் பெருக நம் உடலில் “இரத்தக் கொதிப்பாக” மாறுகின்றது.
1.நம் உடலில் இத்தகைய மாற்றங்கள் ஏற்பட ஏற்பட
2.அதாவது உணர்ச்சியின் வேகம் கூடக் கூட
3.நரம்பு மண்டலங்கள் அந்த வீரிய துடிப்புகள் துடிக்கத் துடிக்க
4.கடுமையான நிலையாகி நம் நரம்பு மண்டலங்கள் சரியாக இயக்காதபடி விடைத்து விடுகின்றது.

நாம் நுகரும் உணர்வுகளை நம் உடலில் பரவச் செய்யும் (TRANSACTION) அந்த நுண்ணிய நரம்புகள் அந்தக் கார உணர்ச்சிகளின் அழுத்தம் தாங்காது வெடித்து விட்டால் “மரணம் தான்….!”

அதே அழுத்தத்தின் தன்மை நமது நுரையீரல்களில் அதிகமாகச் சேர்ந்து அந்தப் பாகங்களில் வெடித்து விட்டால் “இரத்த இரத்தமாகக் கக்க வேண்டியது தான்….!”

இதைப் போல நாம் நுகர்ந்த உணர்வுகள் அதீதமாக நம் நரம்பு மண்டலங்களில் அது இணையப்படும் போது நம்மை அறியாமலேயே இத்தகைய கடுமையான நிலைகள் ஏற்பட்டு விடுகின்றது.

இதிலிருந்து மீள்வதற்கு எவ்வழியில் நம்மைச் சாந்தப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் அடிக்கடி மகரிஷிகள் உணர்த்திய பேருண்மைகளைச் சொல்லி வருகின்றேன்.

எல்லாம் கேட்கின்றோம். அப்புறம் அதையே மறந்து விடுகின்றோம்.  மறந்து மீண்டும் அந்த இயற்கையின் செயலுக்கே சென்று விடுகின்றோம். காரணம்… நல்லதையே எண்ணிக் கொண்டு இருந்தாலும்
1.நம் உடலிலே ஏற்கனவே பதிவான உணர்வுகள்
2.அந்த அணுக்களுக்குப் பசி எடுக்க ஆரம்பித்துவிடும்.
3.அந்த உணர்ச்சிகள் உந்தி வேகமான நிலைகள் வரப்படும் போது நம் உயிருக்கு எட்டுகின்றது.
4.அந்த உணர்வை நுகரச் செய்கின்றது.
5.நுகர்ந்த பின் அதே உணர்ச்சிகளைத் தூண்டும் பொழுது. நம்மை அறியாமலே அந்தச் செயலுக்குச் சென்று விடுகின்றோம்.
6.தவறு நாம் செய்யவில்லை.

நம்மை அறியாது இத்தகைய இயக்கங்கள் நம்மை இயக்குகின்றது. நம்மை அறியாது வந்து தாக்கும் இந்த உணர்விலிருந்து நாம் எப்படி விடுபடுவது…? என்பதனை நாம் அறிதல் வேண்டும்.

ஏனென்றால் சந்தர்ப்பத்தால் நாம் எடுத்துக் கொண்ட உணர்வே நம்மை இயக்குகின்றது. அதைத் தடுத்து நம்மை நாம் காக்க வேண்டும் என்றால் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை  நுகர்ந்து நம் உடல் முழுவதும் படரச் செய்ய வேண்டும்.

அடிக்கடி அந்த உணர்வை எடுத்து ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும். ஆத்ம சுத்தி செய்யும் பழக்கம் நமக்குள் வந்துவிட்டால்
1.நம் உடையில் ஒட்டும் தூசியைத் தட்டிவிடுவது போல்
2.நம்மை அறியாது இயக்கும் தீமைகளை எளிதில் விலக்கித் தள்ளிவிடலாம்.

No comments:

Post a Comment